Wednesday, November 16, 2011

PANCHA BHOOTHA STHALANGAL -Thiruvaanaikka(cont.)

                                                பல்லவி
அப்புத்தல  அய்யனே  நிதம்  நின்னடி  போற்றினேன்
செப்பு  மொழி  யாவும்  நின் நாமமாக  வேண்டினேன்
                                              அனு பல்லவி
முப்புரமெரித்த  முதல்வனே  முழுமுதல்  ஈசனே
எப்போதுமென்  சிந்தையுரை  திருவானைக்கா வாசனே
                                         சரணம்
இப்புவி மேவும்  ஐம்பூதங்களின்  அரசனே
எப்போதும்  நீருரைகின்ற  ஜம்புகேசனே
தப்பாது   நித்தம்  நின் பாதம்  போற்றிடவே
அப்பனே  நீஎன்றும்  அருளவாயே  ஆண்டவனே
                               -kalaavathy rengassamy 

PANCHA BHOOTHA STHALANGAL -Thiruvaanaikka(cont.)

ஸ்ரீ சக்ர நாயகி :

        அன்னை  அகிலாண்டேஸ்வரி   அணிந்திருக்கும்  காதணிகள்  இரண்டும்  இரு ஸ்ரீ  சக்ரங்களாகும்.  ஆதியில்  அன்னை மிக  உக்கிரமுள்ளவளாக  விளங்கினாள்.  அன்னையின்   உக்கிரஹத்தை தணிக்க  ஆதி  சங்கரர்  இரண்டு  ஸ்ரீ  சக்ரங்களை  அம்பாளின்  காதுகளில்  அணிவித்தார்.  அவை  இரண்டும்   அன்னையின்  காதுகளில்  தோடுகளாக விளங்குகின்றன. இச்சக்ரத்தை   அணிவித்த பின்பு  அம்பாள்  உக்ரஹம்  தணிந்து  அருள் பாலிக்கிறாள்.   இது  வேறு  எந்த  ஆலயத்திலும்  இல்லாத  அதிசயமாகும்.

Thursday, October 27, 2011

PANCHA BHOOTHA STHALANGAL

      பஞ்ச பூத ஸ்தலங்கள் -திருவானைக்கா(தொடர்ச்சி) ..............
இத்தலத்திற்கு  ஆனைக்கா  எனப்பெயர்  ஏற்பட்டதற்கு  புராணக்கதை  ஒன்று  உண்டு.  
            காட்டில்  வசித்து  வந்த  ஓர் யானை  முன்னைபயனால்  ஒரு  சிவலிங்கத்தைக் கண்டது.  லிங்கத்தைக்  கண்ட  நாள்  முதலாய்  தினமும்   காவிரியில்  நீராடி  தன் தும்பிக்கையில்  நீரைக் கொண்டு  வந்து  லிங்கத்திற்கு  நீராட்டி, பூக்களை  பறித்து  பூஜித்து,  காய்கனிகளை  பறித்து  நிவேதனம்  செய்து 
அன்றாட  பூஜை  செய்து  வந்தது.  அதே  சமயம், வெண்ணாவல்  மரத்தில்  வசிக்க தொடங்கிய  சிலந்தி  ஒன்று,  தானும்  சிவலங்கத்திற்கு  ஏதாவது  செய்ய  நினைத்து  தன்  வாய்  நூல்  கொண்டு  பந்தலமைத்து  லிங்கத்தை  காத்தது.  லிங்கத்தை  விட உயரமான இடத்தில், அதாவது மரத்தின்  மேல்  தான்  அமர்ந்திருந்தால்  அபசாரம்  என்றெண்ணி  அங்கிருந்து  அகன்றது. 
     வழக்கப்படி  லிங்கத்தை  பூஜிக்க  அங்கு வந்த யானை சிலந்தி வலையை  பார்த்து  கோபமுற்று   அதனை தன்  தும்பிக்கையினால்  பிய்த்து  எறிந்தது  சிலந்தியின்   எச்சிலை  தீண்டிய  துதிக்கையினால்  பூசித்தல்  அபசாரம்  எனக்கருதி  குளிக்க சென்றது.  அவ்வேளையில்  சிலந்தி  மறுபடியும்  வலை பின்னியது.  யானையும்  சிலந்தியும்  மாறி  மாறி  இவ்வாறு  செய்து கொண்டிருந்தது.  
            ஒருநாள்  சிலந்தி  வலை   பின்னிக்  கொண்டிருந்த  பொழுது,  யானை  வந்து  வழக்கம் போல  வலையை  தும்பிக்கையால்  கலைத்தது. சிலந்திக்கு  
கோபம் வந்து  யானையின்  துதிக்கை வழியாக  புகுந்து,  யானையின்  தலை  உச்சியில்  கடித்தது.  யானையின்  உச்சியாகிய உயிர் நிலையல் சிலந்தி  கடித்ததால்  யானையின்  உயிர் பிரிந்தது.  யானை உயிரற்று  படுத்து விட்டத்தால்   சிலந்தியும்  வெளியே வர முடியாது  இறந்து விட்டது.  
          சிவத்தொண்டு  செய்யும்  பணியில்   இரண்டு  ஜீவன்களும்  இறந்ததால் 
சிவ பெருமான் லிங்கத்திலிருந்து  வெளிப்பட்டு  யானை கைலாயத்திலிருக்கும்
பூத கணங்களுக்கு  தலைமை ஏற்கவும்,  சிலந்திக்கு  சோழ  மன்னனாக  பிறக்கும்  படியும்  வரமளித்தார்.  
          அன்றுமுதல்  இத்தலம் ஆனைக்கா என்றும்  திருவானைக்கா என்றும்  வழங்கப்படுகிறது.   யானைக்கு  வட மொழியில்  கஜம்  என்று பெயர்.  அது கொண்டு  கஜாரண்யம்  என்றும்  இத்தலம்  அழைக்கப்படுகிறது.  (தொடரும்)

Monday, October 24, 2011

PANCHA BHOOTHA STHALANGAL

                                    தல  வரலாறு 
 திருச்ச்ராபள்ளியின்  புனித  தலங்களில்  ஒன்றான இத்திரு தலம் பஞ்ச பூத தலங்களில் நீர்தலமாகும்.   (பஞ்ச பூதங்கள்:- நீர்,  நிலம், ஆஹாயம், வாயு,  அக்னி).   இது  திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில்  திருவரங்கம்  வட்டத்தில்  அமைந்துள்ளது.  
              இக்கோவில்  சுமார்  2500  ஆண்டுகளுக்கு  முன்னர் கோச்செங்கட் சோழ மன்னனால்  கட்டப்பட்டது. 
               இத்தலம்  ஞான பூமி, ஞானத்தலம்,  ஞநேந்திரம்  எனவும்  அழைக்கபடுவதால்  இது  மெய்ஞானம்  அருளும்  மேன்மை  தலமென  உணரலாம்.   இத்தல  நாயகியின்  நேர் பின்புறம்  ஞான சக்தியருளும்  திருவுரு  ஸ்தாபிக்க  பட்டுள்ளதாலும் இவ்வுண்மை  புலப்படும்.  

              இத்திருத்தலம்  திருவானைக்கா  அல்லது  திருவானைக்கோவில்,  ஜம்புகேஸ்வரம்,  அமுதேச்வரம், கஜாரண்யம், சம்புவனம்,  வெண்ணாவல்  வனம்  எனப்  பல  பெயர்களால்  அழைக்கப்படுகிறது. 
                   வெண்ணாவல்   வனம்  எனும்  பெயர் பெற்றதற்கு  காரணமான  புரானக்கூற்று   என்னெவெனில்  சம்புமாதவன்   என்னும்  முனிவர்  நாவற்காட்டில்   தவமேற்கொண்டிருந்த்கார்.   ஒருநாள்   அவர்  தவமியற்றி  கொண்டிருக்கும்  பொழுது  அவர் மடியில்  ஓர்  வெண்ணாவர் பழம்  விழுந்தது. 
சிவ பக்தனாகிய   அம்முனி  தன்  மடியில் விழுந்த  நாவற் பழத்தை  எடுத்துகொண்டு   கைலை   நாதனாகிய  சிவ பெருமானின்   இருப்பிடமான  திருக்கைலையை   அடைந்து,   சிவபெருமானிடம்  அப்பழத்தை  கொடுத்தார். 
சிவபெருமானும்   அதனை  ருசித்து   சாப்பிட்டு விட்டு,  அதன்  கொட்டையை உமிழ்ந்தார்.  உமிழ்ந்த  அக்கொட்டையை  பிரசாதமாக  எண்ணி  சம்புமாதவன் 
அதனை  சாப்பிட்டார்.  அக்கொட்டை  சம்பு  மாதவனின்  வயிற்றில்  முளைக்கத்    தொடங்கிற்று.  பெரியதோர்  நாவல்  மரமாக  கிளைவிட்டது. 
இதைக்கண்ட  சம்புமாதவன்  செய்வதறியாது  ஆண்டவனை  அடிபணிந்து   வணங்கினார்.  சம்புமாதவன்  தன்  மீது  கொண்ட  பக்தியின் ஆழத்தை  உணர்ந்த  ஆண்டவன்  "நீ  பூலோகம் சென்று  அங்கு  புனித  பூமியான  பாரதத்தில்   காவிரிக்கரையில்   அமைந்த  நாவற்காட்டில்,   பராசக்தியின்  அருள்பெற்று  ஞானம்  பெற   தபசிகள்  தவமியற்றும்  புனித  இடந்தனில்  சென்று   இருப்பாயாக.  நான்  உன் வயிற்றில்  வளரும்  அம்மரத்தடியில் லிங்க 
வடிவாக  தங்கி  அருள் புரிவேன்"  என்றார்.  எனவே இத்தலம், 'வெண்ணாவர் வனம்'  என வழங்கபடுகிறது.  முனிவர் 'சம்பு மாதவனின்' வயிறில்  வளர்ந்த வெண்ணாவல்  மரமே  தல  விருட்சமானதால்  'ஜம்புகேஸ்வரம்'  எனவும்  அழைக்க  படுகிறது.                       (தொடரும்)


PANCHA BHOOTHA STHALANGAL

                                                         திருவானைக்கா - அப்பு தலம்
         
           நாட்டை                              பல்லவி 
தாயே  நீயே  துணை  ஜகன்மாதா
வாய்மொழி  யாவும்  நின்னாமமாஹிட    (  தாயே)
                            அனு பல்லவி  
மாயையில்  மாந்தர்  மூழ்கிடாமலே  
சேய்களை  காக்க திருவுரு  கொண்டாய்   (  தாயே)
                            சரணம்  1 
தேய்கின்ற  நிலவும்  வளர்கின்ற  பிறையும்
ஓய்வின்றி   சுழலும்  இப்புவியும்  பகரும்  
தூய  நின்னடியன்றியே யாவும் 
மாய  உலகில்  நிலையிலாது எனெவே

                            சரணம் -௨
காயம்  இதுவும்  பொய் என உரைக்கும் 
நேய நின் பதியின் நீர்கொண்ட  உறையுள் 
தாயுன்  கருணை  ஞானசக்தி  உலகில் 
சேய்கள்  மெய்ஞானம் பெறவருள்  புரியும்     

                          சரணம்  -௩
அகிலத்தை  காக்கும்  அருள்நிறை  அன்னையே 
சகல  உயிர்களும்  உன்னருள்  பெறவே 
நிகரிலா  நின்னடி  தொழுதோம்  தாயே 
அகிலாண்டேஸ்வரியே  அருள்புரிவாயே   (தாயே)


Wednesday, October 19, 2011

Thayumaanavar

                                         தாயுமானவர்   
        
                                              பல்லவி
மலைக்கோட்டைதனில்  மகிழ்வாக  அமர்ந்திட்ட மாணிக்க விநாயகனே 
நிலையான  வளமுடை காவிரியாய்  திருச்சிரப்பள்ளியிலே  திகழ்பவளே 

                                              அனுபல்லவி 
மலைப்புதரும்  மலையதனின்  உச்சிவந்து உன்னடி  தொழுவோரை 
மனக்கவலை  வேரறுத்து  மாட்சிமை  செய்யும்  நின்னடி  தொழுதொமே 
                                                  சரணம்  
மகப்பேறு  காலமதில் மாதொருத்தி   மனமுருகி  அழைத்தவுடன் 
இகபரம்  காக்கும்  ஈசனவன்  இசைந்தோடி  தாயாக  உருமாறி  
சுகப்ரசவம்  ஆகிடவே  துணைபுரிந்த  நின்தந்தை  கோலமதை  
நெகிழ்வுடனே   தரிசிக்க   நின்சந்நிதி  அடைந்தோமே  அருள்வாய்   நீ   (மலைகோட்டை)    - கலாவதி  ரெங்கசாமி .

Wednesday, August 24, 2011

vinayagan varugave!

                                                      விநாயகனே  வருகவே!
                                                              பல்லவி 
கழல்  பதம் பணிந்தேன் கரிவதனா - கருணை 
நிழல்  தர  வேண்டும்  நாயகனே                           
                                                    அனு பல்லவி
அழலென  தகிக்கும்  துயர் துடைப்பாய் 
சுழல்  ஞானம்  காக்கும் சக்தி  மைந்தா 
                                                   சரணம்
மாய  வாழ்வினில் மயங்கியே  மாய்ந்திடாது
தூய  நின்னடி  வணங்குதல்     வேண்டுமே 
நேயன்  நின்னடி  நினைத்தலை  அன்றியே 
சேயன்  எனெக்கென்ன  வேண்டும் இவ்வுலகிலே   (கழல்
                                               -கலாவதி  ரெங்கசாமி



   (கலாவதி  ரெங்கசாமி  எழுதிய   தேவியர்  பெருமை  - நவராத்திரி  பாடல்கள்  என்ற  புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது  அதன்  துவக்க  பாடல்).

Saturday, August 20, 2011

Janmashtami

ராகம்-ரீதி கௌள                        தாளம்- ஆதி 
பல்லவி 
என்னதான் மாயம்  செய்தாய் மாயவனே 
உன்  சின்ன வாய்  திறந்து  உலகை  காட்டிடவே
அனு பல்லவி
பாலுறை  வெண்ணையை  உண்டாய்  பாலகனே -இந்த 
பாரெல்லாம்  தெரிய என்ன வித்தை செய்தாய் 
சரணம் 
உரலிலே  கட்டினாள் உன் அன்னை உனையே 
உனக்கின்னும்  ஏன்தான்  கள்ளம்  போகவில்லை 
அரவத்தின் மீதேறி  ஆடுகிறாய்  கண்ணா
அதுவென்ன  நர்த்தன  களமோ மாயவனே
(என்னதான்  மாயம்)
-பாடல்: கலாவதி  ரெங்கசாமி 
(ஒலி பதிவு செய்ய பட்டது -நிருத்யமாலிக என்ற  புத்தகத்தில்  இடம் பெட்ட்றது.